கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்-இந்தியாவிடம் ஒப்படைக்கிறது இலங்கை?முட்டுக்கட்டையில் சீனா மும்முரம்
டெல்லி: கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிடம் இலங்கை அரசு ஒப்படைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி நிமிடம் வரை முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் சீனா தீவிரமாக இறங்கி இருக்கிறது என்கின்றன கொழும்பு தகவல்கள்.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலங்களில் சீனாவின் கையே ஓங்கியே இருந்தது. சிங்களர் பிரதேசமான தென்னிலங்கையில் சீனாவும் தமிழர் தாயக பிரதேசமான வடகிழக்கில் இந்தியாவில் காலூன்றி உள்ளன.
இலங்கையின் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தை சீனா நிறுவியுள்ளது. அதேபோல் கொழும்பில் துறைமுக நகரத்தையும் சீனா உருவாக்கி வருகிறது. திருகோணமலையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கொள்கலன்களை இந்தியா பயன்படுத்தியும் வருகிறது. வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
அம்பந்தோட்டா துறைமுகம்
தென்னிலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா நிறுவனத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு இலங்கை கொடுத்தது. ஆனால் இலங்கையின் புதிய அதிபரான கோத்தபாய ராஜபக்சே, இந்த 99 ஆண்டுகால குத்தகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனை சீனா விரும்பவில்லை.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்
இந்நிலையில் 2019-ல் இந்தியா- இலங்கை- ஜப்பான் இணைந்து கொழும்பில் சீனாவின் சர்வதேச கொள்கலன் முனையம் அருகே கிழக்கு கொள்கலன் முனையம் ஒன்றை அமைப்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இதற்கு சீனா மறைமுகமாக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது மகிந்த ராஜபக்சே கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்சே பிரதமரான நிலையில் வேறுவழியே இல்லாமல் இந்தியாவிடம் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
சீனாவின் மறைமுக எதிர்ப்பு
இதனால் சீனா ஆதரவு கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின. இந்த அமைப்புகளுடன் மகிந்த ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தி சமாதனப்படுத்தி இருந்தார். இதனிடையே கிழக்கு கொள்கலன் முனையத்தை எப்படியேனும் தம் வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் படுதீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் தீவிரமான இந்த நகர்வுகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் முட்டுக்கட்டை போட்டு இலங்கை அரசுக்கு நெருக்கடி தர முடியுமோ அந்த வழிகளை எல்லாம் சீனாவும் கையாண்டு வருகிறது.
இலங்கையில் அஜித் தோவல்
அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்றபோதும் கூட கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக இந்த பயணம் என இலங்கை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டிருந்தன. அதேபோல் அதானி குழுமத்திடம் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஒப்படைக்கப் போகிறீர்களா? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த கேள்வியை நிராகரித்திருந்தது.
சீனாவுக்கான இந்தியாவின் பதிலடி
கொழும்பு துறைமுகத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கொள்கலன்கள் பரிமாற்றங்கள்தான் மிக அதிகமானது. கிழக்கு கொள்கலன் முனையம் மட்டும் இந்தியா வசமாகிவிட்டால் இப்போது கொள்கலன் பரிமாற்றங்கள் நடைபெறும் கொழும்பு துறைமுகத்தில் சீனா உருவாக்கி வைத்திருக்கிற சர்வதேச கொள்கலன் முனையம் மிக கடுமையான வருவாய் இழப்பை சந்திக்கும். இது சீனாவுக்கு பெரிய நெருக்கடியையும் தரும். இப்படியான கணக்குகளுடன் எப்படியாவது கிழக்க்கு கொள்கலன் முனையத்தை கையகப்படுத்த இந்தியா மும்முரமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு பெறப்போகும் வெற்றியானது வெளியுறவு விவகாரங்களில் சீனாவுக்கு தரப்போகிற கடுமையான பதிலடி என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.