தமிழக மீனவர்கள், படகுகள் விடுவிப்பு.... இலங்கை அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை
டெல்லி: தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிப்பது தொடர்பாக இந்தியா வருகை தந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக தினேஸ் குணவர்த்தன வருகை தந்துள்ளார். டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை தினேஸ் குணவர்த்தன இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உறுதி அளித்திருந்தார். அது தொடர்பாக இலங்கை அமைச்சரிடம் நினைவுபடுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த தினேஸ் குணவர்த்தன, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என்றார்.
இச்சந்திப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றார்.