இலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பிற்பகலில்தான் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகின. தொடக்கம் முதலே மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனாதான் முன்னணியில் இருந்தது. கடைசி முடிவுகளின்படி மொத்தம் 145 இடங்களை ராஜபக்சே கட்சி கைப்பற்றி உள்ளது.
இதனிடையே ராஜபக்சே கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையிலேயே அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு மகிந்த ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.
இலங்கை தேர்தல்: ராஜபக்சே கட்சி 145 இடங்களில் அமோக வெற்றி- ரணில் கட்சி படுதோல்வி
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக, அந்நாட்டுப் பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு இடையேயும், நாடாளுமன்ற தேர்தலைத் திறம்பட நடத்திய இலங்கை அரசையும், தேர்தல் அமைப்புகளையும் பிரதமர் பாராட்டினார்.
தேர்தல்களில் உற்சாகமாக பங்கெடுத்த இலங்கை மக்களைப் புகழ்ந்துரைத்த பிரதமர், இரண்டு நாடுகளும் கொண்டுள்ள வலுவான ஜனநாயக பண்புகளை இது பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சியின் தேர்தல் வெற்றியை, வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் பறைசாற்றுவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக மஹிந்த ராஜபச்சேவுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமது அன்பான மற்றும் சிறப்பான கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்த இரண்டு தலைவர்களும், இந்தியா - இலங்கை இடையேயான நீண்டகால மற்றும் பன்தன்மையிலான உறவுகளை வலுப்படுத்தும் தமது உறுதிப்பாட்டையும் பகிர்ந்து கொண்டனர். இருதரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தினர்.
இந்தியாவில் உள்ள புத்தமத தலமான குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் நிறுவப்பட்டிருப்பதை ராஜபக்சேவிடம் தெரிவித்த பிரதமர், இந்த நகரம் இலங்கையிலிருந்து வரும் யாத்ரீகர்களை வரவேற்க காத்திருப்பதாகக் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை தீரப்பதற்கு இருநாடுகளும் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் என்பதையும், வரும் நாட்களில் இருதரப்பு உறவுகளை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.