அதெல்லாம் விட்ருங்க.. கை குலுக்கலாம் வாங்க.. கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!
டெல்லி: காங்கிரஸ் எதிர்ப்பு நிலையைக் கைவிட வேண்டும் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின் அங்கு பல்வேறு தலைவர்களைச் சந்தித்து திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு அழைத்து வருகிறார். அதில் ஒரு தலைவராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்தித்தார் ஸ்டாலின்.
அப்போதுதான் அவரிடம் மேற்கண்ட கருத்தை தெரிவித்து, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
பெரிய கூட்டணி தேவை
கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின்பேசியபோது, காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை விட்டு விடுங்கள். நாட்டுக்கு இப்போது மாபெரும் கூட்டணி தேவைப்படுகிறது. அதில் உங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்றார் ஸ்டாலின்.
அப்துல்லாவும் அதே கருத்து
சில வாரங்களுக்கு முன்பு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் இதேபோன்றதொரு அறிவுரையைக் கூறியிருந்தார். ஆனால் அது காங்கிரஸ் கட்சிக்கு. ஈகோவை தொடர்ந்து நீங்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால், தொடர்ந்து தோற்பீர்கள் என்று அவர் காங்கிரஸுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
வெட்டி பந்தா
உண்மையில் ராஷ்டிரிய ஜனதாதளம் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின்போது கெஜ்ரிவாலுடன் இணைந்து அமர ராகுல் காந்தி மறுத்து விட்டார். இது காங்கிரஸின் திமிர்த்தனத்தையே காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குமுறல் வெளியிட்டிருந்தனர்.
பெருந்தன்மையாளர் கெஜ்ரிவால்
இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வர கெஜ்ரிவால் சம்மதித்துள்ளார். இது மிகப் பெரிய முடிவாகும். ராகுல் காந்தியும் கூட்டத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு நாயுடு இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
காங். கோட்டையை தகர்த்தவர்
அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்து வந்த டெல்லியை அதனிடமிருந்து பறித்தவர் ஆவார். 2013ல் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கவிழ்த்து விட்டது. இதனால் பாஜகவோடு, காங்கிரஸின் எதிர்ப்பையும் சேர்த்து சமாளிக்கும் நிலைக்கு ஆத் ஆத்மி தள்ளப்பட்டது.
காங்கிரஸுக்கு எதிரி
பின்னர் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம். அது முதலே காங்கிரஸ் ஓரம் கட்டியே நிற்கிறது, ஒட்டி வர மறுக்கிறது. டெல்லி மட்டுமல்லாமல், பஞ்சாப், ஹரியானாவிலும் காங்கிரஸுக்கு சரியான எதிரியாக ஆம் ஆத்மி திகழ்கிறது. இரு கட்சிகளும் இங்கு கிட்டத்தட்ட சம பலத்துடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.