டெல்லியையும் விடாத மேகதாது விவகாரம்… சோனியாவுக்கு அழுத்தம் தரும் ஸ்டாலின்
டெல்லி : டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவை சந்திக்கும் ஸ்டாலினுக்கு மேகதாது விவகாரத்தில் நம்பிக்கை அளிக்கும் வகையில் சில வாக்குறுதிகளை அவர் அளிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு களமிறங்கி உள்ளார்.
இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாளை டெல்லியில் நடை பெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
[மேகதாது அணை.. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் ஸ்டாலினின் "பலே" திட்டம் ]
அழைப்பிதழ்
டெல்லி சென்றுள்ள ஸ்டாலின், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவரிடம் 16ம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழையும் வழங்குகிறார். இதேபோல பல முக்கிய தலைவர்களையும் ஸ்டாலின் சந்தித்து அழைப்பிதழை வழங்குகிறார்.
நடவடிக்கைகள்
மிகுந்த எதிர்பார்ப்புடன் டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்றுவதற்கான வலுவான நடவடிக்கைகள் நிச்சயம் தொடங்கும் என்றே கூறலாம்.
அணை கட்டும் விவகாரம்
ஆனால், அதே வேளையில் மாநிலத்தின் தனித்துவமான சில பிரச்சனைகளும் விவாதிக்கப்படும் என்ற சூழலும் உருவாகி உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் காவிரி நதிநீர் பங்கீடு... ஆரம்பம் காலம் தொட்டே தமிழகத்துடன் மல்லுக்கட்டி வரும் கர்நாடகா.... இந்த விவகாரத்தில் வேறு ஒரு பாதையை தற்போது தேர்ந்தெடுத்துள்ளது. அது தான் மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்.
பரப்புரை
மேகதாதுவா..? அணை கட்டினால் என்ன கேள்வி எழுப்புவர்கள் இதனை கொஞ்சம் வாசித்தால் உண்மை நிலவரம் தெரியும். 5 ஆயிரத்து 912 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வெறும் குடிநீருக்காகவும், மின்சார தேவைக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது என்று கர்நாடகா இன்றளவும் பரப்புரை செய்து வருகிறது.
விவசாய நிலங்கள்
ஆனால், அணை கட்டினால் என்ன நிகழும் என்பதை இங்குள்ள தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக விவசாய அமைப்புகளும் அபாய குரல் எழுப்புகின்றன. மேகதாதுவில் இருந்து 15 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் உள்ள நிலையில் இந்த அணை தேவையில்லை என்றும், 15 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும், 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி வருகின்றன.
ஆலோசனை
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரின் எதிர்ப்பும், பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு இணையாக, திமுகவின் கண்டனமும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. சோனியாவை சந்திக்கும் ஸ்டாலின் சோனியாவிடமும், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
வெறுப்பு
ஆனால், இந்த கோரிக்கையை அவர் எந்தளவுக்கு ஏற்று தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவார் என்பது கணிக்க முடியாத ஒன்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார். தேசிய, மைய நீரோட்டத்தில் பயணப்பட்டு கொண்டிருக்கும் காங்கிரஸ், ஒரு மாநில மக்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும் சம்பாதித்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் நோக்கர்கள்
கோரிக்கையையும், எதிர்ப்பையும் உள்வாங்கி கொண்டு நம்பிக்கை அளிக்கும் சோனியா, இது குறித்து கர்நாடக காங்கிரசிடம் பேசுவதாக கூறி, தற்காலிகமாக பிரச்சனையை தள்ளி வைப்பார் என்றும், அதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் ஆரூடம் சொல்கின்றனர்.ஆனால், அது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பதை அடுத்து வரக்கூடிய நிகழ்வுகளே இறுதி செய்யும்.