செல்போன் ஆப் தடை மட்டுமல்ல, அடுத்தடுத்து அதிரடி.. சீனாவுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடிக்கும் இந்தியா
டெல்லி: இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் உண்மையான கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் நிலவும் டென்ஷனை குறைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில், சீனாவுக்கு எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிக்க ஆரம்பித்துள்ளது இந்தியா.
Recommended Video
அதுவும் தெளிய வைத்து தெளிய வைத்து என்று சொல்வார்களே அப்படி அடித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. 48 மணி நேரத்திற்குள், டிக்டாக் மற்றும் யூசி ப்ரவுசர் போன்ற நாட்டின் மிகப்பெரிய சீன செல்போன் செயலிகளில் 59ஐ மத்திய அரசு தடை செய்தது.
சீன தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களான ஹுவாவே மற்றும் இசட் இ ஆகியவற்றுக்கு, 4ஜி மேம்பாட்டு டெண்டர்களை ரத்து செய்துள்ளது. இந்திய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்கவும் தடை விதித்தது.
கயத்தாறு செக்போஸ்ட்டில் காரை நிறுத்ததாத ஸ்ரீதர்.. விரட்டி பிடித்த சிபிசிஐடி போலீஸ்.. நடந்தது என்ன?
சீனாவின் அதே யுக்தி
அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்களுக்கு சீனா தடை போட்டு விட்டு தனது நிறுவனங்களை வளர்த்தெடுத்தது. இப்போது அதே பாணியைத்தான் இந்தியா கையில் எடுத்துள்ளது. கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றை சீனா பல ஆண்டுகள் முன்பே தடை போட்டுவிட்டது. இப்போது இந்தியா அதே வழியை கையில் எடுத்து சீனாவின் செயலிகளை தடை செய்து இருக்கிறது. இதன் மூலமாக மேலும் பல நாடுகளும் இதே வழியைப் பின்பற்றி சீனாவின் தொலை தொடர்புத்துறை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
5 ஜி நெட்வொர்க்
செயலிகள் தடையோடு விடவில்லை இந்தியா. தற்போது 4ஜி தொழில் நுட்பத் திறன் மேம்பாட்டு விஷயங்களுக்கு சீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். அதை நிறுத்துகிறது இந்தியா. மேலும் 5ஜி நெட்வொர்க் செயல்பாட்டுக்கு வரும்போது, சீன நிறுவனங்களை உள்ளே அனுமதிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஏற்றுமதி
இது சீனாவின் ஹுவாவே நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடியாகும். அதேநேரம் இது ஒரு வழி பாதை கிடையாது. இந்தியாவுக்கு சீனா பதிலடியாக எதையாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். குறிப்பாக மருந்துத்துறை உள்ளிட்ட சில நிறுவனங்களில், நமது உற்பத்தியை சீனா அதிகம் நம்பிக் கொண்டு இருக்கிறது. அதை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பெரிய பாதிப்பு இல்லை
சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஆண்டு, சுமார் 57 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு உள்ளது. கடந்த ஆறு வருடங்களாக இது படிப்படியாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சீனாவுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களின் அளவு குறைவுதான். ஒருவேளை சீனா நமக்கு பதிலடி தருவதாக நினைத்து தடை விதித்தால், அதனால் பெரிய பாதிப்பு ஏற்படப் போவது கிடையாது.
இந்திய சந்தை
உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அதிலும் இளம் தலைமுறையினர் அதிகம் வாழக்கூடிய நாடு. எனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா நோக்கித்தான் வருகின்றன. எனவே, செல்போன் செயலிகள், 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்ப தடைகள், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தடைகள் என்பது அவற்றுக்கு முக்கியமான பின்னடைவு. இந்திய சந்தையை குறிவைத்து இருந்த சீனாவுக்கு எங்கே வலிக்குமோ அங்கே அடிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா.
சாணக்கியத்தனம்
இப்போதைய சூழ்நிலையில் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்படுவது நாட்டு பொருளாதாரத்தை தான் பலவீனப்படுத்தும். உயிரிழப்பும் கூட நிகழக் கூடும். அது இரு நாடுகளுக்கும் பிரச்சனைதான். ஆனால் நவீன தொழில்நுட்ப காலத்தில் அந்த தொழில்நுட்பத்தை கொண்டே பதிலடி கொடுப்பது தான் சாணக்கியத்தனம். அதைத்தான் இந்தியா தற்போது கனகச்சிதமாக கையில் எடுத்துள்ளது. சீனா இதை நினைத்து வருந்தப்போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.