ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: லோக்சபாவில் அமித்ஷா உறுதி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து அமித்ஷா பேசியதாவது:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை நீக்கியதை எதிர்ப்பவர்கள் அங்குள்ள நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பரப்பி தேசத்தை தவறாக வழிநடத்த வேண்டாம்.
70 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?
370வது பிரிவு நீக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என கேள்வி எழுப்புகிறார்கள். 370வது பிரிவு நீக்கப்பட்டு 17 மாதங்கள்தான் ஆகின்றன. கடந்த 70 ஆண்டுகளாக நீங்கள் காஷ்மீரில் சரியாக செயல்பட்டிருந்தால் இந்த கேள்வியை இப்போது எழுப்பமாட்டீர்கள்.
ஏன் நீக்கவில்லை?
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள் ஏன் 70 ஆண்டுகாலமாக 370வது பிரிவை நீக்காமல் இருந்தீர்கள்? ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மூலம் மாநில அந்தஸ்து கிடைக்காது என பல எம்.பி.க்கள் கூறினார்கள். நீங்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்?
உரிய தருணத்தில் மாநில அந்தஸ்து
இந்த மசோதாவுக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. உரிய தருணத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
காங். ஆட்சி கால நாட்கள்
மணிஷ் திவாரி அவர்களே, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி காலங்களை எண்ணிப்பாருங்கள்.. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பெரும்பாலான நாட்கள் ஊரடங்குதான் அமலில் இருந்தது. ஜம்மு காஷ்மீரில் அமைதி என்பதே பெரிய விஷயமாக இருந்தது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்
அந்த மோசமான அமைதியற்ற சூழ்நிலை இப்போது ஜம்மு காஷ்மீரில் இல்லை. ஏனெனில் எங்களுடைய அரசு மத்தியில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தோம். 51% பேர் வாக்களித்தனர். அரசியல் எதிரிகள் கூட இந்த தேர்தலை குறைசொல்ல முடியாத அளவுக்கு நடத்தி இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.