அப்படி பேசியிருக்க கூடாது.. டெல்லியில் பாஜக தோற்க காரணம்.. மனம் திறந்தார் அமித் ஷா!
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர்களில் ஒருசிலரால் வெறுக்கத்தக்க பேச்சு முன்வைக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார். இதுபோன்ற உரைகள் தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்று 'டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2020' நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒப்புக்கொண்டார்.
"ஷாஹீன்பாக் போராளிகள், உங்கள் மனைவிகள் மற்றும் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என்று பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால், துரோகிகளை சுடுங்கள், இது இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி என்றெல்லாம் சிலர் பிரச்சாரம் செய்தனர். அப்படி செய்திருக்க கூடாது. எங்கள் கட்சி உடனடியாக இதுபோன்ற பிரச்சாரத்திற்கு பொறுப்பே ஏற்க முடியாது என அறிவித்திருந்தது" என்று அமித் ஷா கூறினார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான பின்னர் முதல் முறையாக அமித் ஷா இப்போதுதான் அதுகுறித்து பொது நிகழ்ச்சியில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
"இது போன்ற சர்ச்சை கருத்துக்கள் கட்சியின் பார்வை அல்ல. ஆனால் இந்த பேச்சு காரணமாக நாங்களும் தேர்தலில் பின்னடவை சந்தித்திருக்க கூடும். வாக்காளர்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை, என்பது சரியாக தெரியவில்லை. ஏனெனில் வாக்காளர்கள் யாரும் காரணத்தை எழுதி தருவதில்லை. ஆனால் சர்ச்சை பேச்சுக்களும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம், " என்று அமித் ஷா, மேலும் கூறினார்.
டெல்லி தேர்தலில் எனது கணிப்பு தவறாகிவிட்டது. எங்கள் கட்சி பெரும்பான்மையுடன் வென்றிருக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன், ஆனால் கணிப்பு தவறியதை ஒப்புக்கொள்வதில் எனக்கு கவலையில்லை. பெரும்பாலான நேரங்களில் நான் சரியாக கணித்துள்ளேன் என்று அவர் மேலும் கூறினார்.