கூட்டுறவு கூட்டாட்சி பெயரில் மாநில உரிமைகளை புல்டோசர் கொண்டு நசுக்குகிறது மத்திய அரசு: மமதா அட்டாக்
டெல்லி: கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை புல்டோசர் கொண்டு நசுக்குகிறது மத்திய அரசு என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
நீட், ஜேஇஇ தேர்வுகள், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்கள் மமதா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஹேமந்த் சோரன், பூபேஷ் பாகல், அமரீந்தர்சிங், நாராயணசாமி, கெலாட் ஆகியோர் பங்கேற்றனர்.
வீடியோ கான்ஃபரன்ஸில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
நீட், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பரில் நடைபெற உள்ளன. நாம் நமது மாணவர்களின் வாழ்க்கையை ஏன் பணயம் வைக்க வேண்டும்?
நாம் மாணவர்களை மனரீதியாக துன்புறுத்துகிறோம். ஜனநாயகத்தில் பலவிதமான ஒடுக்குமுறைகளை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை. தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாம் நமது குழந்தைகளுக்காக பேச வேண்டியது உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. நமது கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்காத நிலையில் நாம் அனைத்து மாநிலங்களுமே ஒன்றாக இணைந்து உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியதுதான்.
நீட், ஜேஇஇ-க்கு எதிர்ப்பு: மமதா உட்பட 7 பாஜக அல்லாத முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு
கூட்டுறவு கூட்டாட்சி என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளை புல்டோசர் கொண்டு நசுக்கி வருகிறது மத்திய அரசு. கூட்டாட்சி அமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாம் சுதந்திரமாக பகிரங்கமாக பேச முடியவில்லை. ஃபேஸ்புக் தொடங்கி கருத்து சுதந்திரம் எங்குமே இல்லை.
மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ53,000 கோடி நிலுவை வைத்துள்ளது. ஆனால் இதுபற்றி நாம் பேச முடியாது. மத்திய அரசின் ஏஜென்சிகளை நமக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள்.
இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.