நாடு முழுவதும் 2.2 கோடி பேருக்கு இ பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை.. மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் இ பாஸ்போர்ட்கள் வழங்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக 2.2 கோடி பேருக்கு இ பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்களை வழங்க வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தன் மூலம் விமான பயணிகளுக்கு நேரம் கூடுதலாக மிச்சமாகும்.
இது பற்றி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விவரங்கள் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டு சிப்பில் சேமிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் தாரர்களின் விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் இந்த சிப்பினுள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இது தற்போதைய பாஸ்போர்ட் கையேட்டில் பதிக்கப்படும் என்றார்.
இதற்காக நாசிக்கில் செயல்பட்டு வரும் இந்தியா செக்யூரிட்டி ப்ரஸிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்தார். நாசிக்கில் எலக்ட்ரானிக் சிப்புகள் தயார் செய்யப்பட்டவுடன் அவை பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனை திருத்தவோ, அழிக்கவோ முடியாது.
இ பாஸ்போர்ட்டில் பொருத்தப்படும் சிப்பில் ஒருவேளை சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்தால், பாஸ்போர்ட் அங்கீகாரத்தின் தோல்வி விளைவாக கணினியால் அதை அடையாளம் காண முடியும் என கூறினார்.
ஐஎஸ்பி நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் 3 கட்ட ஒப்பந்தபுள்ளி மூலமாக எலக்ட்ரானிக் சிப்களை கொள்முதல் செய்துக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி மற்றும் கொள்முதல் செய்வதற்கான செயல்முறைகள் முடிந்த பின்னர் இ பாஸ்போர்ட் உற்பத்தி தொடங்கப்படும் என்றார்.