அவங்க சொல்றது எல்லாமே பொய்... மத்திய அரசை விளாசும் விவசாய சங்க தலைவர்
டெல்லி: விவசாயிகளின் பிரச்சினைகளில் 50% தீர்வு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது முற்றிலும் பொய்யான தகவல் என்று விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அமல்படுத்தியது. இருப்பினும், இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முடிவுகள் எட்டபடவில்லை
இது குறித்து மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றன. இருப்பினும், மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறுவதே ஒரே நோக்கம் என்பதில் விவசாயிகள் தெளிவாக உள்ளதால் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சுத்த பொய்
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளில் ஒன்றான ஸ்வராஜ் இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ் பேசுகையில்," எங்ளின் கோரிக்கையில் 50% ஏற்றுகொண்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், இது முற்றிலும் பொய்யான ஒன்று. இதுவரை எதையும் அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கவில்லை" என்றார்.
மத்திய அமைச்சர் கூறுவது என்ன
முன்னதாக சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பேச்சுவார்த்தைகளில் நான்கு பிரச்சினைகளில் இரண்டிற்கு முடிவு எட்டப்பட்டுள்ளாக தெரிவித்திருந்தார்.
உடன்பாடு ஏற்படவில்லை
ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள யோகேந்திர யாதவ்,"மூன்று விவசாய சட்டங்களும் திரும்பப் பெறபட வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர வேண்டும் - இந்த இரண்டும்தான் எங்கள் முக்கிய கோரிக்கைகள். இதுவரை இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
மீண்டும் முற்றுகை போராட்டம்
அரசுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஜனவரி 6ஆம் தேதி குண்ட்லி-மானேசர்-பல்வாலில் பேரணி நடத்துவோம். அதன் பின்னர் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.