போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களிடம் கோவாக்சின் சோதனையா... உடனடியாக நிறுத்த பிரதமருக்கு கடிதம்
டெல்லி: போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி சோதனை நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்தியாவில் வரும் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி சோதனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கோவிஷீல்டு தடுப்பூசியே மக்களுக்கு அளிக்கப்படும். கோவாக்சின் தடுப்பூசி சோதனை முறையிலேயே பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதேபோல மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலும் தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகிறது.
பிரதமருக்குக் கடிதம்
இந்நிலையில், போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கோவாக்சின் தடுப்பூசி சோதனை நடைபெறுவதாகவும் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கும் நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
கோவக்சின் சோதனை
அதில், "போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கோவாக்சின் தடுப்பூசி நடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இந்தத் தடுப்பூசி சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே,விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இழப்பீடு
போபால் விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 700 முதல் 1,700 பேரிடம் கோவாக்சின் தடுப்பூசி சோதனை நடைபெறுகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு உயிரிழந்தவருக்கு ரூ.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.