வடஇந்தியா முழுவதையும் ஆக்கிரமித்துள்ள போதை வஸ்துக்கள்.. மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி புகார்
டெல்லி: தலைநகர் டெல்லியில் சுமார் 25,000 மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து நிற்பதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி சுப்பாராமி ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் நேரமில்லா நேரம் எனப்படும் ஜீரோ ஹவரின் போது இது குறித்து பிரச்சனை எழுப்பிய எம்பி சுப்பாராமி ரெட்டி, மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை காவல்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதாக சாடினார்.
மாணவர்களுக்கு போதை பொருட்கள் மிக எளிதாக கிடைக்கிறது. இதனால் விவரமறியா பருவத்திலேயே போதையின் பிடியில் சிக்கி சிறுவர்களும், மாணவர்களும் தங்களது வாழ்க்கையை இழக்கின்றனர்.
டெல்லியில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த வடஇந்தியாவிலும் போதை பொருட்களின் புழக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்களில் 83 சதவீம் பேர் படித்தவர்கள் என்பது மிகவும் வேதனைக்குரியது என குறிப்பிட்டார்.
மேலும் இத்தகைய அவலநிலைக்கு மாநில அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்காதது தான் காரணம். போதை பொருள் கும்பலின் அதிகார பலம் காரணமாக இந்த சமூக அவலத்தை தடுத்து நிறுத்த இயலவில்லை.
ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போதை பொருள் புழக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா வழியாக இந்தியாவிற்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு தவிர இதர அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அப்போது தான் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றார் சுப்பாராமி ரெட்டி. அவரது இந்த கோரிக்கைக்கு உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர்
பின்னர் பேசிய மற்றொரு மாநிலங்களவை உறுப்பினரான பிரபாகர் ரெட்டி, சட்டவிரோத உறுப்பு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.