சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது!
டெல்லி: புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவு என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டில் நடத்திய ஒரு ஆய்விலேயே சைவ உணவு உண்பவர்களுக்கு வைரஸ் நோய்கள் குறைவாகவே உள்ளன என்று தெரியவந்தது.
ஆனால் வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அசைவ உணவை சாப்பிடலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆட்டிப்படைக்கும் கொரோனா
ஒரு ஆண்டை கடந்தும் இன்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது. கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
சைவ உணவு சாப்பிடுபவர்கள்
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை கொரோனா தாக்கும் என்பது இயல்புதான். ஆனால் கொரோனா வைரஸ் யாருக்கு தாக்கும், யாரை தாக்காது என்பது தொடர்பாக ஒரு விவாதமே நடந்து வந்தது. அசைவம் சாப்பிடுவர்களை கொரோனா தொற்றிவிடும், சைவ உணவு சாப்பிடுபவர்களை கொரோனா தொற்றாது என கருத்து நிலவி வந்தது.
ஆய்வில் தகவல்
இந்த நிலையில் இந்த கருத்துகணிப்புக்கு ஒரு விடை கிடைப்ப்பதுபோல் ஒரு ஆய்வு வந்துள்ளது. புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) பான்-இந்தியா செரோசர்வே என்ற ஆய்வு நடத்தியுளளது.
புகைபிடிப்பவர்களுக்கு நல்லதா?
கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளது என்று கண்டறியப்பட்டது. மேலும், தனியார் போக்குவரத்து, குறைந்த ஆட்கள் அளவுள்ள தொழில்கள், புகைபிடித்தல், 'ஏ' அல்லது 'ஓ' இரத்த குழு வகையை சேர்ந்தவர்கள் ஆகியோர் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக உள்ளனர் என ஆய்வு கூறுகிறது.
இதய நோய் பாதிப்பு குறைவு
கடந்த 2016-ம் ஆண்டில் நடத்திய ஒரு ஆய்வில் சைவ உணவு உண்பவர்களுக்கு வைரஸ் நோய்கள் குறைவாகவே உள்ளன என்று தெரியவந்தது. எல்.டி.எல் கொழுப்பு, உடல் பருமன் குறைவாக இருப்பது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் காரணமாக சைவ உணவு உண்பவர்களுக்கு குறைந்த இதய நோய்கள் உள்ளன என்பதற்கான சான்றுகள் உள்ளன என்றும் அந்த ஆய்வு கூறியது.
உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?
ஆனாலும் சைவ உணவுகள் ஏதேனும் வைரஸ் நோய்களை எதிர்த்துப் போராடமுடியுமா? என்பது முழுமையாக தெரியவில்லை. வைரஸ் தொற்றுநோய்களின் போது அசைவ உணவை உட்கொள்வதை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு ஒருபோதும் கூறியதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளையும், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் போன்ற உணவுகளையும் மக்கள் சாப்பிடலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.