நந்தவனத்தில் ஓர் ஆண்டி... பாஜகவில் இருந்து வெளியேறுகிறாரா சுப்பிரமணியன் சுவாமி? மீண்டும் ஜனதா கட்சி?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் ஐடி விங் தலைவர் அமித் மால்வியாவை நாளைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கெடு விதித்துள்ளார். அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜகவை விட்டு சுப்பிரமணிய சுவாமி வெளியேற கூடும் என தெரிகிறது.
ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அக்கட்சியை பாஜகவில் இணைத்தார். பின்னர் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பெற்றார். ஆனாலும் தமக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் நீண்டகால கனவு.
நிதி அமைச்சராக அருண்ஜேட்லி இருந்த போதும் பாஜக எம்.பி.யாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி குடைச்சல் கொடுத்தார். அதேபோல் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்து கொண்டே இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது என்பது சுப்பிரமணியன் சுவாமி கருத்து.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் - சோதனைக்குட்படுத்தப்பட்டவருக்கு உடல் நலக்குறைவு!
அமித் மால்வியா- சு.சுவாமி மோதல்
ஆனாலும் பாஜக தலைவர்கள் சுப்பிரமணியன் சுவாமியை பொருட்டாக மதிப்பதும் இல்லை. இதனிடையே பாஜகவின் ஐடி விங் தலைவர் அமித் மால்வியா மீது தொடர்ச்சியாக சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அமித் மால்வியாவின் தூண்டுதலின் பேரில் தம்மை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிக்கிறார்கள் எனவும் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கொந்தளித்திருந்தார்.
ஜேபி நட்டாவுக்கு சுவாமி கெடு
இதன் உச்சகட்டமாக தற்போது, பாஜக ஐடிவிங் தலைவர் பதவியில் இருந்து அமித் மால்வியாவை நாளைக்குள் நீக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு கெடு விதித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பான தமது ட்விட்டர் பதவியில், அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜக என்னை பாதுகாக்கவில்லை; பாஜகவில் எனக்கு இடம் இல்லை என்று அர்த்தம். இதனால் அடுத்த கட்டம் குறித்து கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுப்பேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாஜகவை விட்டு விலகல்?
சுப்பிரமணியன் சுவாமி புகாரை எல்லாம் மதித்து பாஜக தலைமை நடவடிக்கை எதுவும் எடுக்காது என்றே தெரிகிறது. தமக்கு முக்கியமான பதவி கிடைக்கும் என இலவுகாத்த கிளியாக இருந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, அமித் மால்வியா பிரச்சனையை முன்வைத்து பாஜகவை விட்டு வெளியேறக் கூடும் என்றே தெரிகிறது.
ஜனதா கட்சியை மீண்டும் தொடங்கும் சு.சுவாமி
அப்படி பாஜகவில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி வெளியேறினால் மீண்டும் ஜனதா கட்சி எனும் லெட்டர் பேடு கட்சியையே அவர் தொடர்ந்து நடத்துவார் எனவும் தெரிகிறது. ஜனதா கட்சியில் சுப்பிரமணியன் சுவாமியும் முன்னாள் ஐ.ஏ.எஸ்.. அதிகாரி சந்திரலேகாவும்தான் இருந்தனர். இருந்த இருவரும் இணைந்து மீண்டும் ஜனதா கட்சியின் பெயரால் பாஜகவுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்க வாய்ப்பு உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.