'ஆபரேஷன் ப்ளூஸ்டார்' சோவியத் யூனியனின் சதி... பிந்தரன்வாலே 'துறவி'.. சு.சுவாமி பகீர்!
டெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையே அன்றைய சோவியத் யூனியனின் சதி என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தியது காலிஸ்தான் விடுதலை இயக்கம். இந்த விடுதலை இயக்கத்தின் தொடக்க கால நடவடிக்கைகளை மத்திய அரசு பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தது.
ஆனால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கடி உருவானது. இதையடுத்து காலிஸ்தான் விடுதலைஈயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு இந்திரா காந்தி தள்ளப்பட்டார்.
பொற்கோவிலில் ராணுவ தளம்
அதேநேரத்தில் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை தங்களது தளமாக கொண்டிருந்தனர். இதனால் பொற்கோவிலுக்குள் நுழைந்து ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார் இந்திரா காந்தி.
பிந்தரன்வாலே படுகொலை
பின்னர் ஆபரேஷன் ப்ளூஸ்டார் என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்து நடவடிக்கை மேற்கொண்டது. 1984-ம் ஆண்டு ஜூன் 3 முதல் 6-ந் தேதி வரை பொற்கோவில் யுத்தம் நடைபெற்றது. இதில் காலிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் பொற்கோவிலுக்குள்ளே கொல்லப்பட்டனர்.ரி
பழிக்கு பழியாக
இச்சம்பவம் சீக்கியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பழியாகவே இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் படுகொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளதாவது:
|
சு.சுவாமி பகீர்
ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை என்பது சோவியத் யூனியனின் சதி. பாகிஸ்தானுக்கு எதிராக நாம் சோவியத் யூனியனை சார்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட சதி. துறவி பிந்தரன்வாலே மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சியின் சுர்ஜித்சிங்கால் இந்திராவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
பிந்தரன்வாலேவுக்கு
பிந்தரன்வாலேவை துறவி என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஆயிரக்கணக்கான இந்துக்களை பஞ்சாப்பிலிருந்து விரட்டியடித்த பிந்தரன்வாலேவை எப்படி துறவி என குறிப்பிடலாம் என சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.