ஐ.டி. கமிஷனர் ஸ்ரீவத்சாவுக்கு கட்டாய ஓய்வா? நிர்மலா சீதாராமனுக்கு எதிராக சு.சுவாமி போர்க்கொடி
Recommended Video
டெல்லி: வருமான வரித்துறை ஆணையர் எஸ்.கே ஸ்ரீவத்சாவுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டாய ஓய்வு கொடுத்துள்ளதற்கு எதிராக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
மத்திய பாஜக அரசில் எப்படியும் நிதி அமைச்சராக வேண்டும் என துடித்தவர் சுப்பிரமணியன் சுவாமி. கடந்த 5 ஆண்டுகால மோடி தலைமையிலான ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த அருண்ஜேட்லிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார்.
தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை தக்க வைத்த போதும் தமக்கு எப்படியும் நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. அமைச்சரவை பதவியேற்கும் நாளில் தமது ஆதரவாளர்கள் மூலம் ட்வீட்டுகளை போட செய்து அதை ரீ ட்வீட் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
செம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை
அமைச்சர் பதவி எதிர்பார்ப்பு
ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. புதிய நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். இதனால் இலவு காத்த கிளியாகத்தான் ட்விட்டரில் புலம்பிக் கொண்டிருந்தார். ராமர் கோவில், ராமர் பாலம் பிரச்சனைகளை கையில் எடுக்கப் போவதாகவும் ட்விட்டரில் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
நிர்மலா சீதாராமன் அதிரடி
இந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் 12 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த 12 பேரில் வருமான வரித்துறை ஆணையர் ஸ்ரீவத்சாவும் ஒருவர். என்.டி.டி.வி. தொலைக்காட்சியின் முறைகேடுகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டவர் ஸ்ரீவத்சவா.
யார் ஸ்ரீவத்சா
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடர்ச்சியாக பல புகார்களை கூறி வருபவர் ஸ்ரீவத்சா. 2014 லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்ட போது, வேட்புமனுவில் தவறான தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போதைய லோக்சபா தேர்தலிலும் சிவகங்கைக்கு வந்து சிதம்பரம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி பரபரப்பை கிளப்பியவர் ஸ்ரீவத்சா. சிவகங்கையில் போட்டியிட்ட பாஜக தேசிய செயலர் எச். ராஜாவுக்கு ஆதரவாகவே ஸ்ரீவத்சா களம் இறக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
வழக்குகளில் சிக்கிய ஸ்ரீவத்சா
இந்த ஸ்ரீவத்சா மீது நிதி மோசடி, பாலியல் புகார் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது ஸ்ரீவத்சா உள்ளிட்ட 12 மூத்த நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டாய ஓய்வு கொடுத்துள்ளார்.
|
நிர்மலா சீதாராமனுக்கு சு.சுவாமி எதிர்ப்பு
நிர்மலா சீதாராமனின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ஸ்ரீவத்சா மீதான நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், என்.டி.டி.வியின் நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் ஸ்ரீவத்சா. ப.சிதம்பரத்தால் பொய்யான வழக்குகள் ஸ்ரீவத்சா மீது போடப்பட்டன. அவற்றை அடிப்படையாக வைத்து ஸ்ரீவத்சாவுக்கு கட்டாய ஓய்வு அளித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் கடிதம் எழுத இருக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பதவியை மட்டும் குறிவைத்து செயல்படும் சுப்பிரமணியன் சுவாமி தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளார். பாஜக வட்டாரங்களில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.