சு.சுவாமியின் செம மூவ்.. தினகரன் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் பெரும் சவால்!
Recommended Video
டெல்லி: திடீரென, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
சுப்பிரமணியன் சாமியின் இந்த கருத்தின் மூலம், பாஜகவில் இரு அணிகள் இயங்கி வருவது மீண்டும் ஒருமுறை வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
ஒரு பக்கம், அருண் ஜேட்லி, குருமூர்த்தி உள்ளிட்டோர் என்றால், சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் மற்றொரு பக்கமாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இப்படியான இரட்டை செயல்பாடு வெளிப்படையாக தெரிவது இது முதல் முறை கிடையாது.
சசிகலா ஆதரவு
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபோது, சசிகலாவுக்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் அமித்ஷா, நரேந்திர மோடி ஆகியோரின் திட்டம் வேறு மாதிரி இருந்தது. அவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். சுப்பிரமணியன் சுவாமியின் மூலமாக, எவ்வளவோ முயன்று பார்த்தும், சசிகலா கோஷ்டியினரால், பாஜக தலைமையின் முடிவை மாற்ற முடியாமல் போனது.
முக்குலத்தோர் ஓட்டுக்கள்
இருப்பினும் சுப்பிரமணியன் சுவாமி தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை தளர்த்தி கொள்ளவேயில்லை. ஆர்கே நகரில் டிடிவி தினகரன், வெற்றி பெற்றபோது சுப்பிரமணியன் சுவாமி தனது நிலைப்பாடு எவ்வளவு சிறப்பானது என்பது இப்போது புரிந்திருக்கும் என்று கோடிட்டு காட்டினார். முக்குலத்தோர் வாக்குகளை தினகரன் தரப்பின் பின்னால் அணிதிரள செய்ய வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் விருப்பம். ஆன்மிகப் பற்று கொண்டவர் தேவர் என்று வாயாரப் புகழ்ந்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி.
ஆதரவு
இந்த நிலையில்தான், தனது தலைமையிலான விராத் இந்து சபையினரோடு கலந்து ஆலோசித்த பிறகு, தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்குமாறு, தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு பக்கம் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்ப்பது, தான் தான் என்று தினகரன் தனது பிரச்சாரங்களில் சொல்லி வருகிறார். எஸ்டிபிஐ என்ற இஸ்லாமிய கட்சியோடு அவர் கூட்டணியும் அமைத்துள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது, பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.
சிறுபான்மையினர் வாக்குகள்
ஆர்கே நகர் இடைத் தேர்தல் சமயத்தில், நலிவுற்றிருந்த கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரடியாகச் சென்று சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது தனது பயண திட்டங்களை ரத்து செய்துவிட்டு மோடியை வரவேற்று உபசரித்தார் ஸ்டாலின். இதன் காரணமாகத்தான் ஆர்கே நகரில் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் திமுகவுக்குப் செல்லாமல் தினகரனுக்கு சென்றதாகவும், திமுக டெபாசிட்டை இழந்ததாகவும், அரசியல் பார்வையாளர்கள் சொல்லி வருகிறார்கள்.
அதிருப்தி
எனவேதான், திமுக எப்போது வேண்டுமானாலும் பாஜக பக்கம் கூட்டு சேரும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இந்த லோக்சபா தேர்தலில் தீவிர பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தினகரனுக்கு நேரடியாக ஆதரவு அளித்திருப்பது சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்து கொடுத்துள்ளது.
இரண்டு விஷயம்
பாஜகவின் ஒரு கோஷ்டி மூலமாக இல்லாவிட்டாலும் இன்னொரு கோஷ்டி மூலமாக தினகரன் தொடர்பு வைத்து இருப்பார் என்ற ஐயப்பாடு அவர்களுக்கு எழுந்துள்ளது. மற்றொரு பக்கம், சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய பங்காற்றி ஜெயலலிதாவை சிறையில் தள்ள, தீவிர சட்ட நடவடிக்கைகளை எடுத்ததில், முக்கியமானவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர் தினகரனுக்கு ஆதரவு அளித்திருப்பது ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது முக்கியமான வாக்கு வங்கி என நம்பிய சிறுபான்மையினர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகளை சுப்பிரமணிய சாமியின் இந்த கருத்தால் இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சொல்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். இவ்வாறு தினகரனுக்கு செல்லும் வாக்குகளை பிரிப்பது பாஜகவின் அஜென்டாவாக கூட இருக்கலாம். சு.சாமி இதற்காக மூவ் செய்திருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.