இலங்கைக்கு செல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி... பரபர ட்வீட்
டெல்லி: பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை தீவிரமாக ஆதரிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என குரல் கொடுத்து வருபவர் சுவாமி.
அண்மையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்ட போது அகமகிழ்ந்து வரவேற்றார் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டதாவது:
I recently received a phone call from my friend Fmr President Rajapaksa. He wanted me to be present at his son’s wedding on 17/9. My pleasure. Rajapaksa saved India from the diabolical plot of Pak and LTTE to dismember India, by wiping out LTTE
— Subramanian Swamy (@Swamy39) July 28, 2019
அண்மையில் எனது நண்பர் மகிந்த ராஜபக்சேவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. செப்டம்பர் மாதம் 17-ந் தேதி ராஜபக்சே மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இத் துணைக்கண்டத்தில் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டி இந்தியாவை பாதுகாத்தவர் மகிந்த ராஜபக்சே என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ராஜ்யசபா எம்பிக்கள் சுப்பிரமணியன் சுவாமிக்கும் வைகோவுக்கும் ஏழாம் பொருத்தம். வைகோவைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி; அவர் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருபவர்.
தற்போது ராஜ்பக்சே தமக்கு போன் செய்தார்; அவர் வீட்டு திருமணத்துக்கு செல்கிறேன் என சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். இதற்கு நிச்சயம் வைகோ எதிர்வினையாற்றுவார் என்பதால் பரபரப்பு உருவாகியுள்ளது.