ப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா?
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கும் தருணம் வந்துவிட்டதாக பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் தர மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியபோதும் அவசர வழக்காக விசாரிக்காமல் நாளை மறுநாள் அவர் மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.
ஏற்கனவே தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியுள்ளது. ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் பாஜகவின் உக்கிரமாக ப.சிதம்பரத்துக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிதம்பரம் தொடர்பான கேலி சித்திரங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.
Time to start process to declare PC as a proclaimed offender and attach all his properties
— Subramanian Swamy (@Swamy39) August 21, 2019
இந்த பட்டியலில் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் இணைந்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், ப. சிதம்பரத்தை தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கும் தருணம் வந்துவிட்டது; அவரது சொத்துகளையும் முடக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.