மறைக்கப்படும் மரணங்கள்.. குப்பையில் வீசப்படும் வல்லுநர்கள் பரிந்துரை..இந்திய மருத்துவ சங்கம் காட்டம்
டெல்லி: இந்தியாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் கொரோனா அல்லாத மரணங்களாகப் பதிவு செய்யப்படுவதாகவும் ஊரடங்கு குறித்து வல்லுநர்கள் அளித்த அறிவுரைகளை மத்திய அரசுக் குப்பையில் வீசியுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களவே தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.
டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு உரிய முறையில் செயல்படவில்லை என இந்திய மருத்துவர்கள் சங்கம் விமர்சித்துள்ளனர்.
ஆர்வம் காட்டவில்லை
இது குறித்து IMA எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் தனது தூக்கத்தில் இருந்து எழுந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மிக மோசமான பாதிப்புகளை ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை போதிய அக்கறை காட்டவில்லை. அவர்களின் பொருத்தமற்ற நடவடிக்கைகள் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குப்பையில் வீசியுள்ளது
கொரோனா உச்சத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் சரியான முறையில் திட்டமிடப்பட்ட முழு லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் எனக் கடந்த 20 நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தற்போதுள்ள நிலைமையை உணர்ந்து நாங்கள் அளித்த இந்த அறிவுரை, மற்றும் பல வல்லுநர்களின் அறிவுரைகளை மத்திய அரசு குப்பையில் வீசியுள்ளது. கள நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்து வருகிறது.
மக்கள் உயிர் முக்கியம்
மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் காரணமாகவே தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல மிதமானது முதல் தீவிர கொரோனா பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கையும் 40% வரை அதிகரித்துள்ளது. நாட்டின் சில மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு ஊரடங்காலும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. மக்களின் உயிர், நாட்டின் பொருளாதாரத்தை விட விலைமதிப்பற்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தடுப்பூசி பணிகள்
18-45 வயது உடையவர்களுக்கு விரைவாக தடுப்பூசி பணிகளைச் செலுத்தத் தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதிலும் போதிய தடுப்பூசி இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. இதனால் பல மாநிலங்களில் 18-45 வயதானவர்களுக்குத் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படவில்லை.
அனைவருக்கும் இலவசம்
தடுப்பூசிகளுக்கு இரு வேறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம். 18-45 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பு முற்றிலுமாக மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. நாட்டில் இருக்கும் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியை வழங்கினால் மட்டுமே இந்தியாவில் விரைவாக தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏன்
நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி போதிய அளவிலிருந்தும், சரியான முறையில் அவை விநியோகம் செய்யப்படாததே ஆக்சிஜனுக்கு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் ஆலைகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பிரச்சினையைத் தீவிரமடையும் முன் இதற்கான தீர்வுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
மறைக்கப்படும் மரணங்கள்
நாட்டிலுள்ள முக்கிய மருத்துவமனைகள் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் கொரோனா அல்லாத மரணங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. நாட்டிலுள்ள அனைத்து சுடுகாடுகளும் நிரம்பியுள்ளன. நிலைமை இப்படியிருக்க அவர்கள் ஏன் உண்மையை மறைக்க வேண்டும்" என்று இந்திய மருத்துவ சங்கம் மிகக் காட்டமாக தங்கள் அறிக்கையில் விமர்சித்துள்ளது.