விவசாயிகள் என்ன தேச விரோதிகளா...என்.ஐ.ஏ.வை அவங்க மீது ஏவி விடுறிங்க...சீறும் சுக்பீர் சிங் பாதல்!
டெல்லி: மத்திய அரசு விவசாயிகளை என்ஐஏ போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டுவதாக ஷிரோமணி அகாலிதளம்(எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டி உள்ளார்.
விவசாயிகள் ஒன்றும் தேச விரோதிகள் அல்ல.மத்திய அரசு விவசாயிகளை இதுபோன்ற செயல்கள் மூலம் சோர்வடையச் செய்ய முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.
விவசாய சங்க தலைவர் பல்தேவ் சிங் சிர்சாவுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளதையடுத்து சுக்பீர் சிங் பாதல் இவ்வாறு கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களை வாபஸ்பெற கோரி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அவர்களில் லோக் பலாய் இன்சாப்நலவாழ்வு சொசைட்டி தலைவர் பல்தேவ் சிங் சிர்சாவும் ஒருவர்.
என்.ஐ.ஏ. விசாரணை
நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டுதல், மத்திய அரசுக்கு எதிராக செயல்படுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில், 'சீக்கியர்களுக்கு நீதி' (எஸ்எப்ஜே) என்ற சட்டவிரோத அமைப்பின் தலைவர் குர்பட்வந்த் சிங் பன்னு செயல்படுவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விவசாய சங்க தலைவருக்கு சம்மன்
எஸ்எப்ஜே அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு 17-ம்தேதி(இன்று) ஆஜராகுமாறு பல்தேவ் சிங் சிர்சாவுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் பஞ்சாபி நடிகர் தீப் சித்து உள்பட 40 பேருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளை என்ஐஏ போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டுவதாக ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய அரசுக்கு கண்டனம்
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் கூறியிருப்பதாவது:- விவசாய சங்க தலைவர்களையும், விவசாய சங்க ஆதரவாளர்களையும் மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் ஒன்றும் தேச விரோதிகள் அல்ல. 9-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின்னர் மத்திய அரசு விவசாயிகளை இதுபோன்ற செயல்கள் மூலம் சோர்வடையச் செய்ய முயற்சிக்கிறது என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது என்று சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.