சுனந்தா புஷ்கர் உடலில் 15 இடங்களில் காயம்.. கோர்ட்டில் போலீஸ் பரபரப்பு தகவல்! சிக்கலில் சசி தரூர்
Recommended Video
டெல்லி: கணவர் சஷி தரூருடனான (காங்கிரஸ் எம்பி) சண்டைகள் காரணமாக சுனந்தா புஷ்கர் மன வேதனையால் பாதிக்கப்பட்டிருந்ததாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லியின் சானக்யபுரியில் உள்ள லீலா என்ற சொகுசு ஹோட்டலில், 2014 ஜனவரி 17ம் தேதி சுனந்தா, புஷ்கர் (51), இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக சசி தரூர் மீது, டெல்லி காவல்துறையினரால் 498-ஏ (கணவர் அல்லது அவரது உறவினர் பெண்ணை கொடுமைக்கு உட்படுத்துவது) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவுக்கு உள்ளாகினார். இந்த வழக்கில் தற்போது சசி தரூர் ஜாமீனில் உள்ளார்.
வழக்கு
விசாரணை நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வக்கீல் அதுல் ஸ்ரீவாஸ்தவா, போலீஸ் தரப்பு வாதத்தை முன் வைத்தார். அவர் கூறியதாவது: பிரேத பரிசோதனையின் படி, புஷ்கரின் மரணத்திற்கு காரணம் விஷம் என்றும், அவரது முன்கை, கைகள், கால் போன்றவற்றில் மொத்தம் 15 காயங்கள் காணப்பட்டதாகவும், இந்த காயங்கள் சண்டை, தகராறு போன்றவற்றால் உருவானது என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர்
சுனந்தா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் சசி தரூருடன் சண்டையிட்டார். புஷ்கரை சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தம்பதியினரிடையே ஏற்பட்ட சண்டையால், புஷ்கர் மன உளைச்சலுக்கு ஆளாகி மன வேதனையால் பாதிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹ்ர் தாரருடனான தரூரின் உறவும், சுனந்தாவின் மன வேதனையை மேலும் அதிகரித்ததாக, அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தோழி வாக்குமூலம்
குற்றப்பத்திரிகையில், புஷ்கரின் நண்பரும் பத்திரிகையாளருமான நளினி சிங் அளித்த வாக்குமூலம் குறித்து குறிப்பிட்ட வழக்கறிஞர், தரூர்-சுனந்தா தம்பதியினருக்கு இடையிலான உறவு மோசமாக இருந்துள்ளது அந்த வாக்குமூலத்தால் தெளிவாக தெரிகிறது என்றார்.
"அழுதுகொண்டே சுனந்தாவிடம் இருந்து எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. நான் அவளிடம் மெஹ்ர் தாரர் ஒரு பிரச்சினை இல்லை, கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். ஆனால் தரூர் மற்றும் தாரரை, பழிவாங்க சுனந்தா விரும்பினார். ஊடகங்களில் பாக். பத்திரிக்கையாளர் மற்றும் சசி தரூர் நடுவே உறவு உள்ளதாக நிறைய செய்திகள் வந்தன. இதையும் புஷ்கர் என்னிடம் தெரிவித்தார். "என்று நளினி சிங் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இவ்வாறு அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார்.
10 வருடம் சிறை
இதையடுத்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில், மற்றொரு முன்னாள் அமைச்சர் சசி தரூருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.