ஓய்வுக்கு முன் கடைசி தேர்தல்.. விடைபெறுகிறார் சுனில் அரோரா
டெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, ஓய்வு பெறுவதற்கு முன்பு நடத்தும் கடைசி தேர்தல் இதுவாகும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி தொடர்புடைய அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (பிப்.26) டெல்லியில் வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேதி அறிவிப்பின் போது, அவ்வப்போது தனது டைமிங் ஜோக்குகளால் அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஓய்வு பெறுவதற்கு முன்பு நடத்தும் கடைசித் தேர்தல் இதுவாகும்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் அரோரா, 1980 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். ராஜஸ்தானில் தோல்பூர், ஆல்வார், நகவுர், ஜோத்பூர் மாவட்டங்களில் ஆட்சியாளராக பணிபுரிந்த அரோரா, 1993 முதல் 1998ம் ஆண்டு வரை முதலமைச்சரின் செயலாளராகவும் பதவி வகித்தார்.
80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா
அதேபோல், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸில் நிர்வாக இயக்குனராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். பிறகு, பதவி உயர்வு பெற்று 2005 முதல் 2008ஆம் ஆண்டு வரை முதலமைச்சரின் முக்கிய செயலாளராக பதவி வகித்தார்.
பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்கு (Prasar Bharti) ஆலோசகராகவும், பெரு நிறுவன விவகாரங்களுக்கான மையத்தின் தலைமை செயலதிகாரி மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2017ல், இந்தியாவின் இரு தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு, பிறகு அதே ஆண்டில் டிசம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
2019ல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல் சுனில் அரோரா தலைமையில் தான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.