80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா
டெல்லி: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறை இந்த தேர்தலில் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறை கட்டாயமல்ல, வாக்காளர் விருப்பப்பட்டால் இதை தேர்வு செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுவை, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது.
கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் நேரம் 5 மாநிலங்களிலும் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இது கட்டாயமல்ல.
விருப்பமுள்ளவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம். விருப்பம் அல்லாதவர்கள் வாக்குப் பதிவு மையத்திற்கே வந்து வாக்களிக்கலாம் என்றார் அரோரா. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்ற நடைமுறை பீகார் சட்டசபைத் தேர்தலில் அமல்படுத்தப்பட்டது.
இதே முறையை தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்திருந்தது. ஆனால் இந்த நடைமுறையை பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதில் வெளிப்படைத்தன்மை இருக்காது என இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.