"நல்ல செய்தி தாமதம் ஆகாது.." சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்?
Recommended Video
டெல்லி: அயோத்தியின் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வுக்கு வந்துவிடலாம் என்ற சமரசத்திற்கு சன்னி வக்பு வாரியம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, இந்து மற்றும் முஸ்லிம் தரப்புகள் நடுவே நடைபெற்ற வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
40 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு.
சீலிட்ட உரை
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட சமரச குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் சீலிட்ட உரையில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், என்ன இருக்கிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மூடிய அறைக்குள் நேற்று அது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
சன்னி வக்பு வாரியம்
இதனிடையே வழக்கில், தொடர்புள்ள சில இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சமரசத் தீர்வுக்கு உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாகித் ரிஸ்வி கூறுகையில், "சமரச குழு முன்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிக்காரர்களும், சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அது தொடர்பாக நான் இப்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. ஆனால் நல்ல செய்தி தாமதம் ஆகாது. கடைசி நிமிடத்தில் கூட நல்ல நிகழ்வுகள் நடந்தே தீரும்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சன்னி வக்பு வாரியம் சமரச தீர்வுக்கு சம்மதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதரவாக உள்ள இந்து அமைப்புகள்
சன்னி வக்ஃப் வாரியம் தவிர, நிர்வாணி அகாடா, நிர்மோஹி அகாடா, ராம் ஜென்மபூமி புன்ருதார் சமிதி மற்றும் வேறு சில இந்து அமைப்பினர் சர்ச்சைக்குரிய நிலப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆதரவாக இருப்பதாக சமரச குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
சில தரப்பு
இருப்பினும், இரண்டு முக்கிய தரப்பான, விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) ஆதரவு கொண்ட, ராம் ஜென்மபூமி நியாஸ் மற்றும் ராம் லல்லா மற்றும் ஆறு முஸ்லிம் வாதிகள், இந்த சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.