அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்?
Recommended Video
டெல்லி: அயோத்தி நில வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சன்னி வக்பு வாரியம் கோரியுள்ளதாக மத்தியஸ்த குழு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.
சன்னி வக்பு வாரியம் ஒருவேளை இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அதை சுப்ரீம் கோர்ட் ஏற்க வேண்டிய நிலை உருவாகும் என்பதால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சன்னி வக்பு வாரிய தலைவர் பருக்கி, வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக வாங்கி, விற்பனை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, உத்தரபிரதேச மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனால், சன்னி வக்பு வாரியத்தின் உறுப்பினர்கள் நடுவே உரசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அயோத்தி வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்ப் வாரியம் முடிவு செய்துள்ளதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
"இந்த நில பிரச்சினையால், அயோத்தி வழக்கில் முஸ்லீம் மனுதாரர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள 22 மசூதிகளை அரசே ஏற்று பராமரிக்க சன்னி வக்பு வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது" என்று சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட் வட்டாரத்திலிருந்து இது தொர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
உச்சநீதிமன்றத்தில் இன்று அயோத்தி வழக்கு தொடர்பான இறுதி வாதங்கள் நடைபெறுகின்றன. சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில், ஆஜராகிவரும், மூத்த வழக்கறிஞர், ராஜிவ் தவான் இன்றும், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். எனவே, வக்ப் வாரியம், வழக்கிலிருந்து இதுவரை பின்வாங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.