மத்திய அரசு மட்டுமல்ல.. மாநிலங்களும் தனியார் துறைக்கு ஊக்கம் கொடுப்பது ரொம்ப அவசியம்.. மோடி பேச்சு
டெல்லி: இந்தியா சுயசார்பு அடைய வேண்டுமென்றால் தனியார் துறைக்கு ஊக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி இவ்வாறு பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆறாவது நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநில முதல்வர்களுடனும், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பிரதமர் பேசுகையில் கூறியதாவது: சுயசார்பு, இந்தியா தற்சார்பு இந்தியா என்ற கோஷங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம் இது உண்மையிலேயே நனவாக வேண்டும் என்றால் தனியார் துறைக்கு அரசு போதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். தனியார் துறை வளர மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.
கொரோனா நோய் பரவல் காலகட்டத்தின் போது மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செயலாற்றியது. இதன் மூலமாக நாம் நோய் பரவலை கட்டுப்படுத்தி உலகம் முழுக்க நல்ல மதிப்பைப் பெற்று உள்ளோம். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதுதான் இந்தியாவின் அடிப்படை. மாநிலங்களுக்கு இடையே மட்டும் கிடையாது. மாவட்டங்களிலும் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தேச வளர்ச்சிக்கு மத்திய-மாநில ஒத்துழைப்பு மிக முக்கியம்...நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு!
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கவில்லை.
மாநிலங்களுக்கு போதிய நிதி அதிகாரம் இல்லை.. மத்திய அரசு பறித்து விட்டது என்பதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என்று மமதா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அமரீந்தர் சிங், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
மத்திய அரசு இரண்டு தொழிலதிபர்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது, மக்களிடம் போடப்படும் வரி நண்பர்களுக்கு செல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தனியார் மற்றும் தனியார் துறைக்கு அதிக ஒத்துழைப்பு வழங்குவது அரசின் கடமை என்று மோடி கூறியுள்ளது முக்கியத்துவம் அளிக்கிறது.