விலங்குகள் மீதான கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்க..நாட்டின் தலைமை நீதிபதிக்கு, வழக்கறிஞர் கடிதம்!
டெல்லி: மசினகுடி யானை போன்று எந்த விலங்குகளுக்கும் கொடுமையான நிகழ்வுகள் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரிம் கோர்ட்டு வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பாரா என்பவர் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை பிரிவு 32 இன் கீழ் ஒரு மனுவாக கருதி விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று நெடும்பாரா கூறியுள்ளார்.
மசினகுடி அருகே 3 கயவர்கள் யானை மீது எரியும் தீ பந்தத்தை வீசினார்கள். இதில் அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காயம்பட்ட யானை
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டலப் வனப்பகுதியான பொக்காபுரம், மசினகுடி, சிங்காரா பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று முதுகில் ஏற்பட்ட காயத்துடன் சுற்றித் திரிந்தது. வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து பின்னர் விடுவித்தனர். தொடர்ந்து அந்த யானையைக் கண்காணித்துவந்தனர்.
பரிதாபமாக இறந்தது
சில நாட்களுக்கு முன்பு மசினகுடி பகுதியில் அதே யானை இடது காது சிதைக்கப்பட்ட நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபமாக உலா வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், யானையைப் பிடித்து லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமுக்குக் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தீ வைத்த கயவர்கள்
இதற்கிடையே யானை மீது தீ வைத்தது தொடர்பாக போலீஸாருக்கு வீடியோ ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவில், மசினகுடி பகுதியிலுள்ள தங்கும் விடுதி வளாகத்தில் புகுந்த அந்த யானையை 3 பேர் விரட்ட முயல்கிறார்கள். கல் மனம் கொண்ட அந்த கயவர்கள் தீயைக் கொளுத்தி, அதன் மூலம் யானையை விரட்டுகிறார்கள். பின்னர் எரியும் பந்தத்தை யானை மீது வீசுகின்றனர். யானையின் தலையில் விழுந்த தீப்பந்தம் கொழுந்துவிட்டு எரிகிறது. அந்த யானை வலி தாங்க முடியாமல் அலறியடித்து, பிளிறியவாறே ஓடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்த்தில் பரவி காண்போரின் கண்களை குளமாக்கியது. இந்த நிலையில் யானைக்குத் தீ வைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தலைமை நீதிபதிக்கு கடிதம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொங்கி எழுந்த பலரும் வனவிலங்குகளை கொடுமைப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மசினகுடி யானை போன்று இனிமேல் வேறு எந்த விலங்குகளுக்கும் இதுபோல் கொடுமையான நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரிம் கோர்ட்டு வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பாரா என்பவர் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முற்றுப்புள்ளி வையுங்கள்
தனது கடிதத்தை ஒரு பொதுநல மனுவாக எடுத்துக்கொள்ளுமாறு தலைமை நீதிபதியிடம் கூறியுள்ள நெடும்பாரா அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் மசினகுடி பகுதியில் யானைக்கு நடந்த கொடுமையான நிகழ்வு தொடர்பான வீடியோ எந்தவொரு மனிதனின் மனசாட்சியையும் உலுக்கி எடுக்கும். உங்களுடைய அரசியலமைப்பு அதிகாரம் விலங்குகளிடம் இன்னும் அதிக இரக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். விலங்குகளுக்கான இதுபோன்ற கொடூரமான கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனித ரீதியாக முடிந்த அனைத்தையும் செய்ய அரசியலமைப்பு கடமையை கருத்தில் கொள்வேன். இந்த கடிதத்தை பிரிவு 32 இன் கீழ் ஒரு மனுவாக கருதி விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று நெடும்பாரா கூறியுள்ளார்.