முதல்வராகும்போதா இப்படியாகனும்.. டி.கே.சிவகுமாருடன் இணைந்து எடியூரப்பா ஊழல்? உச்சநீதிமன்றத்தில் பரபர
Recommended Video
டெல்லி: இன்று மாலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு எதிரான 9 வருடத்திற்கு முந்தைய ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, 2010ம் ஆண்டு 4.20 ஏக்கர் பரப்பளவிலான அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபடுபவர். அரசியலில் எதிரி என்றபோதிலும், சிவகுமார் பலன் அடைய, எடியூரப்பா, குறிப்பிட்ட அரசு நிலத்தை கையகப்படுத்தாமல் விடுவித்தார். இதற்கு பதில், 'பிரதிபலனை' எடியூரப்பா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு 2015ம் ஆண்டு, பெங்களூர் ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை தொடர்ந்திருந்த கபாலேகவுடா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். ஆனால் சில மாதங்களிலேயே வழக்கை வாபஸ் பெற்றார்.
அப்போது கபாலேகவுடாவுக்காக வழக்கறிஞராக ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். ஆனால் வழக்கை அவர் வாபஸ் பெற்ற நிலையில்,
சமாஜ பரிவர்தனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்ப்பில் வழக்கில் ஆஜராகிறார், பிரசாந்த் பூஷண்.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இன்று ஆஜரான பிரசாந்த் பூஷண், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை திரும்பவும் விசாரிக்க கோரினார்.
எடியூரப்பாவை மாநிலத்தின் "அடுத்த முதலமைச்சர்" என்று அப்போது பிரசாந்த் அறிமுகப்படுத்தினார். "நாங்கள் எந்த பெயர்களாலும் அல்லது யாராலும் அசைவுறுவதில்லை" என்று உடனே குறுக்கிட்டு கூறினார், அருண் மிஸ்ரா.
எடியூரப்பாவுக்காக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆஜரானார். 2015ம் ஆண்டு டிசம்பரில் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஊழல் வழக்கை என்.ஜி.ஓ தேவையின்றி மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறது என்று அவர் வாதிட்டார்.
மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, சிவகுமார் தரப்புக்காக ஆஜரானார். அவர் வாதிடுகையில், பூஷன் முன்னதாக கபாலேகவுடாவின் வழக்கறிஞராக இருந்தார், பின்னர் அவர் வழக்கை வாபஸ் பெற்ற பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக வாதிட்டு வருகிறார். பூஷனுக்கோ அல்லது அந்த என்ஜிவோவுக்கோ இந்த வழக்கில் தொடர்பு இல்லை. நேரடியாக பாதிக்கப்படாதநிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தை எவ்வாறு கேட்டுக் கொள்ளலாம்? தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை எவ்வாறு தொடங்கலாம்? என்று சிங்வி கேள்வி எழுப்பினார்.
ஆனால் கபாலேகவுடா, எடியூரப்பா மற்றும் சிவகுமாருடன் "சமரசம்" செய்து கொண்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் இருந்து அவர் திடீரென வழக்கை வாபஸ் பெற இதுவே காரணம் என்றார் பிரசாந்த் பூஷன்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு, நாங்கள் இப்போது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தயார் இல்லை. வழக்கில் அடிப்படை ஆதாரம் உள்ளதா என்பதை விசாரிக்கும் வரை அது நிலுவையில் இருக்கும் என்று தெரிவித்தது.