10 கோடி கார்த்தி சிதம்பரத்திற்கு பெரிதல்ல.. வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை எதிர்கொண்டு வரும் கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்டவற்றில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணையை எதிர் கொண்டு வருபவர் கார்த்தி சிதம்பரம். இவர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இம்மாதம், ஆலோசனை மற்றும் டென்னிஸ் சங்க பணிகளுக்காக, தான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டியிருப்பதால் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு அளித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு ரூ.10 கோடி பிணையத் தொகையுடன், அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு முன்பாக 10 கோடி ரூபாயை பிணையத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்தி விட்டுச் செல்வதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதை கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் குறிப்பிட்டு சொல்லி, வாதாடினார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மேலும் ஒரு 10 கோடி ரூபாயை பிணையத் தொகையாக செலுத்தலாமே. உங்களது கட்சிக்காரர் இந்த பணத்தை செலுத்துவதற்கு கஷ்டப்படுபவர் கிடையாது, என்று தெரிவித்தார். இதையடுத்து மேலும் 10 கோடி ரூபாயை பிணையத் தொகையாக வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் முன்வந்துள்ளார்