தலைமை நீதிபதிக்கு எதிராக பெரும் சதி? சிபிஐ, உளவுத்துறை தலைவர்களுடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக, சிபிஐ இயக்குநர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் ரகசிய ஆலோசனை நடத்த சுப்ரீம் கோர்ட் 3 நீதிபதிகள் அமர்வு இன்று உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர், ரஞ்சன் கோகாய். இவர் மீது முன்னாள் உச்சநீதிமன்ற, பெண் ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்தார். இதை ரஞ்சன் கோகாய் மறுத்ததோடு, நீதித்துறை மீதான நெருக்கடி இது என்று குற்றம்சாட்டினார்.
நாடு முழுக்க இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் உற்சவ் பெயின்ஸ் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பெண் சொன்ன புகாரில் பெரும் சதி இருப்பதாக அவர் கூறினார்.
வைரலான இன்பினிட்டி பூல் போட்டோ.. நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட தம்பதி!
ரூ.1.5 கோடி
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளோரை அம்பலப்படுத்த தயாராக இருப்பதாக உற்சவ் தனது மனுவில் கூறியிருந்தார். கடந்த 22ம் தேதி, இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரணாம பத்திரத்தை உற்சவ் பெயின்ஸ் தாக்கல் செய்தார். அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் என கூறி, ஒருவர் தன்னை அணுகியதாகவும், தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடர, ரூ.1.5 கோடி வழங்க அவர் முன் வந்ததாகவும், ஆனால், தான், வரிசையாக கேட்ட பல கேள்விகளால் அந்த நபர், வழக்கை நீங்கள் நடத்த வேண்டாம் என கூறிவிட்டு சென்றதாகவும் கூறியிருந்தார், உற்சவ்.
சதி வலைகள்
தலைமை நீதிபதிக்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது. 'ஃபிக்சிங்' நடக்கிறது. தீர்ப்புகளை பெற பணம் கொடுக்கும் சதிகாரர்களுக்கு இதில் தொடர்புள்ளது எனவும் உற்சவ் பெயின்ஸ் கூறினார். இந்த நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன் மற்றும் தீபக் குப்தா ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
டைப் வேண்டாம்
இன்றைய விசாரணையின்போது, மீண்டும் ஒரு பிரமாண பத்திரத்தை உற்சவ் தாக்கல் செய்தார். மேலும் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதால், மேலும் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் தயாராக இருப்பதாக, உற்சவ் அப்போது தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, "நீங்களே கைப்பட எழுதி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுங்கள். டைப் செய்தால் கூட டைப்பிஸ்ட் மூலமாக, ஆதாரங்கள் தொடர்பான விஷயம் லீக்காகிவிட வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொள்ளுங்கள். ஆதாரங்கள் நாசமாகிவிட கூடாது." என்று அறிவுறுத்தினார்.
அதிர்ச்சியளிக்கிறது
இதனிடையே வழக்கறிஞர் உற்சவ் இன்று தாக்கல் செய்த, பிரமாண பத்திரத்தை வாசித்து பார்த்த நீதிபதி, அருண் மிஸ்ரா, "இந்த பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், இது மிக அதிர்ச்சியாக உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றத்தை தைரியமாக வழிநடத்துபவர். அவரது தனித்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதா" என கேள்வி எழுப்பினார்.
ரகசிய ஆலோசனை
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இன்று மதியம் 12.30 மணிக்கு, உச்சநீதிமன்ற சேம்பரில், தனிப்பட்ட முறையில், சிபிஐ இயக்குநர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஆஜராக வேண்டும். இது வெறும் விசாரணை கிடையாது. இது அதைவிட அதிகப்படியான விஷயம். ஆனால், ஆலோசனையில் என்ன விவாதித்தோம் என்பதை வெளியே சொல்ல மாட்டோம். அந்த விஷயம் முழுக்க ரகசியமானது என்றார் அருண் மிஸ்ரா. இதன்படி, இன்று மதியம், நீதிபதிகளுடன், சிபிஐ, உளவுத்துறை உயர் அதிகாரிகள், டெல்லி போலீஸ் கமிஷனர் சந்தித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமை நீதிபதிக்கு எதிராக சதி இருப்பதாக பிரமாண பத்திரத்தில் வக்கீல் உற்சவ் குறிப்பிட்டுள்ளது பற்றியும், அந்த சதிகாரர்கள் யார் என்பது பற்றிய தகவல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.