காஷ்மீரில் 4ஜி சேவை.. ஆய்வு செய்து முடிவு எடுக்க சிறப்பு கமிட்டி..உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் 4 ஜி இணைய சேவையை மீண்டும் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது, ஆனால் மத்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தை சேர்ந்த செயலாளர்கள் அளவிலான குழுவை அமைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது.
"இந்த நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் இரண்டும் முக்கியம். இரண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என விரும்புகிறது. காஷ்மீர் நெருக்கடியில் உள்ளது என்பதை நாங்கள் ஏற்கிறோம். அதே நேரத்தில் நீதிமன்றம் தற்போதைய தொற்றுநோய் மற்றும் கஷ்டங்கள் தொடர்பான கவலைகளை அறிந்திருக்கிறது" என்று மனுவை விசாரித்த, நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
"மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் சரியான தன்மையையும் மாற்றுத் தீர்வையும் ஆராய்வதற்கு சிறப்புக் குழு அறிவுறுத்தப்படுகிறது," என்று உச்சநீதிமன்றம் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தது.
தொற்றுநோய் பரவியுள்ள இந்த காலகட்டத்தில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தகம் / வணிகத்திற்கு 4 ஜி இணையதள வேகம் அவசியம் என்று கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகமே பாராட்டிய தென் கொரியா நிலையை பாருங்க.. ஆரம்பித்த கொரோனா செகண்ட் வேவ்.. நைட் கிளப் காரணம்
அதேநேரம், இணைய வேகத்தை அதிகரிக்கக் கோரும் இந்த மனுவை மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் எதிர்த்தன. ஜம்மு-காஷ்மீருக்குள் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் எல்லையில் உள்ள அவர்களின் குழுக்கள் இணையத்தை பயன்படுத்தி, போலி செய்திகளை ஒளிபரப்புவதன் மூலம் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது அரசு தரப்பு கூறியிருந்தது.