உச்சநீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ.. லேட்டஸ்ட் தேர்தல் ஆணையம்.. தன்னாட்சி அமைப்புகள் தடுமாற்றம் ஏன்?
டெல்லி: இந்தியாவின் உயரிய தன்னாட்சி அமைப்புகளில் அடுத்தடுத்து பனிப்போர் வெடித்துள்ளது. அந்த லேட்டஸ்ட் உதாரணம்தான் தேர்தல் ஆணையத்திற்குள் நடைபெறும் உரசல்.
மோடி ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் உச்சபட்ச தன்னாட்சி அமைப்புகள் சீர்குலைக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இப்போது, தேர்தல் ஆணையர் அசோக் லவசா, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதியுள்ள கடிதம் மற்றொரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டிவிட்டதாக அசோக் லவசா தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் பனிப்போரா? தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பரபரப்பு அறிக்கை
பரபரப்பு கடிதம்
தேர்தல் ஆணையம் நடத்த உள்ள கூட்டங்களில் பங்கேற்பது அவசியமற்றதாகிவிட்டதாக உணருவதாக கூறியுள்ள அசோக் லவசா, சிறுபான்மை கருத்துக்கு அங்கு மதிப்பு இல்லை என்றும் ஆணித்தரமாக குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் உச்சபட்ச தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தில், சிலருக்கு பாரபட்சம் பார்த்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையர் ஒருவரே குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தன்னாட்சி அமைப்புகளுக்குள் மோதல்கள் ஏற்பட்டதை கவனித்து பார்த்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியை தந்திருக்காது. முன் எப்போதும் இல்லாத வகையில், சுப்ரீம் கோர்ட், சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில், உள்ளுக்குள்ளேயே உரசல்கள் ஏற்பட்டது, கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாகத்தான் என்பது சோகம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள்
கடந்த ஆண்டு, ஜனவரி மாதம், நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அப்போதைய, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேசினர். இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பு அப்போதுதான், நிகழ்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கையில் தங்களுக்கு திருப்தியில்லை என்று அவர்கள் பரபரப்பு பேட்டியளித்தனர். ஒரு கடிதத்தையும் வெளியிட்டனர். இதன்பிறகு அந்த விஷயம் படிப்படியாக சரியானது.
சிபிஐ vs சிபிஐ
இதன்பிறகு, அதே ஆண்டு இறுதியில், சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவொருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி மோதல் போக்கில் ஈடுபட்டனர். இதனால், இருவரையும் நள்ளிரவோடு கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா வழக்கு தொடர்ந்தார்.
தொடர் சர்ச்சைகள்
விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அலோக் குமாருக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்ததோடு, அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கியது. ஆனால் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, அலோக் குமார் வர்மாவை, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றி தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்பதவியை ஏற்க அவர் மறுத்தார். இவ்வாறு சிபிஐக்குள் சிபிஐ vs சிபிஐ என்ற நிலை உருவானது.
ரிசர்வ் வங்கி
நீதித்துறையின் உச்ச அமைப்பு, விசாரணை துறையின் உச்ச அமைப்பு என முக்கிய அமைப்புகள் பிளவுபட்டதோடு, நிதித்துறையின் முக்கிய அமைப்பான ரிசர்வ் வங்கியிலும் பனிப்போர் வெடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முயல்வதாக தெரிவித்தார். இந்த பேச்சு வெளியான சில வாரங்கள் கழித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது தேர்தல் ஆணையத்திற்குள் தலைமை தேர்தல் ஆணையர் vs தேர்தல் ஆணையர் என்ற நிலை உருவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.