எதிர்ப்பை மீறி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை மாற்ற கொலிஜியம் பரிந்துரை!
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களின் எதிர்ப்பை மீறி பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி. ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
இதனிடையே பொறுப்பு தலைமை நீதிபதி ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் குழு பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மோகன கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி டி.ராஜாவிற்கு இன்னும் ஆறு மாதங்களே பணிக்காலம் உள்ள நிலையில் பணியிட மாற்றம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கான கெட்ட செய்தி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீதிபதி டி.ராஜாவின் பணியிட மாற்ற பரிந்துரையை திரும்ப பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டுமெனவும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிபதி டி.ராஜா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லா அசோசியேசன், ஓய்வின் விளிம்பில் உள்ள நீதிபதி டி.ராஜாவை அவரின் ஒப்புதல் இன்றி பணியிட மாற்றம் செய்வதற்கு பரிந்துரைத்தது ஆரோக்கியமான சூழல் அல்ல எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இந்த எதிர்ப்புகளை மீறி பொறுப்பு தலைமை நீதிபதி ராஜாவை ராஜஸ்தானுக்கு கொலிஜியம் குழு இன்று பரிந்துரைத்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.