8 வழிச்சாலை திட்டம்.. மத்திய அரசின் மேல்முறையீடு மீது ஜூலை 31-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், வரும் ஜூலை 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது இதற்காக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர்களை எல்லாம் காவல்துறை கொண்டு அடக்கி நிலங்களை அளவிட்டு கையகப்படுத்தும் பணி துவங்கியது. இந்நிலையில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, திட்டத்திற்கு தடை விதிக்க கோரி நில உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்து இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இடையில் மக்களவை தேர்தல் வந்ததால் இவ்விவகாரத்தை ஆறப்போட்டன மத்திய மற்றும் மாநில அரசுகள்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த சில நாட்களிலேயே, எட்டு வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்த தடை விதித்தசென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்குமாறு, மத்திய அரசு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார். எத்தனை பேர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள். எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என வினவியது. சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் இப்பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஐகோர்ட்டின் தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட வேண்டும். சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்தது.
இந்த வாக்குறுதியை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு மனுத்தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.பின்னர் இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது பற்றி மத்திய அரசின் கோரிக்கை மீது ஜூலை 31-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறி ,வழக்கை அன்றைக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.