தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் வெடித்தது. சுற்றுச்சூழலை சீர்கெடுப்பதாக கூறி பொதுமக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். போரோட்டத்தை அடக்க கடந்த ஆண்டு மே 22ம் தேதி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்தது.
பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் 28ஆம் தேதி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், பசுமை தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என கூறி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தாவும் வழக்கு தொடர்ந்தது.
நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான இரு நபர் அமர்வு முன்னிலையில் நடந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று, இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.
அதிகாரமே கிடையாது.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்.. ஸ்டெர்லைட் தீர்ப்பின் விவரம்
அதில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், வேண்டுமானால், வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வேதாந்தா குழுமம் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதால், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்நதாக, தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.