நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: 100 சதவீதம் விவிபேட் ஒப்புகையுடன் வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான, 2 நீதிபதிகள் அடங்கிய, கோடை விடுமுறை கால அமர்வு, இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
சென்னையை சேர்ந்த 'டெக் ஃபார் ஆல்' என்ற அமைப்பு சார்பில், இப்படி ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் இன்று அதிரடியாக சில கருத்துக்களை முன் வைத்தது.
சென்னை அமைப்பு
டெக் ஃபார் ஆல் அமைப்பு தாக்கல் செய்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளை தவிர்க்க, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று அறியும் விவிபேட் இயந்திரத்திலுள்ள தகவலுடன் ஒவ்வொரு ஓட்டையும், ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கோரப்பட்டது.
நியூசென்ஸ்
இந்த வழக்கை, 'நியூசென்ஸ்' என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இந்த நாடு அதன் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கட்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தது. "வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு புகார் தொடர்பாக ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்போது ஏன் 2 நீதிபதிகள் அடங்கிய, விடுமுறைக்கால அமர்வு முன்னிலையில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். நாங்கள் தலைமை நீதிபதி தீர்ப்பை மாற்றி எழுத முடியாது. இது 'நான்சென்ஸ்'. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.
21 எதிர்க்கட்சிகள்
விவிபேட் ஒப்புகை சீட்டில் 50 சதவீதத்தையாவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என வலியுறுத்தி 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த சீராய்வு மனுவை தலைமை நீதிபதி அமர்வு மே 7ம் தேதி தள்ளுபடி செய்தது. ஆனால் லோக்சபா தொகுதிக்குள் அடங்கும் ஒவ்வொரு சட்டசபை தகுதியிலும் 5ல் ஒரு பூத்தில் விவிபேட் ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கால தாமதம்
இந்த உத்தரவின் காரணமாகத்தான், லோக்சபா தேர்தல் ரிசல்ட் வெளியாக, வழக்கத்தைவிட, இம்முறை, கூடுதலாக, காலதாமதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 23ம் தேதி, அதாவது வியாழக்கிழமை, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், நள்ளிரவு வரையும் கூட வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.