ப.சிதம்பரத்திற்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ.. உச்சநீதிமன்றம் மறுப்பு.. மனு டிஸ்மிஸ்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு சிபிஐ விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Recommended Video
2007 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது சட்ட விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு வருவதற்கு சிதம்பரம் உதவினார் என்பது குற்றச்சாட்டு.
இதற்கு பதிலாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும் நிறுவனத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா தலைவர் பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோர் சார்பில் லஞ்ச பணம் முதலீடு என்ற வகையில் பெறப்பட்டதாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வருடம் சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அக்டோபர் 22ஆம் தேதி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகு டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை வழக்கிலும் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் தொடரும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
"சீராய்வு மனு மற்றும் அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் விவரமாக ஆராய்ந்து பார்த்தோம், எங்களது உத்தரவில் மாறுபாடு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம், பல் மருத்துவ கல்வி.. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% கோட்டா.. ஹைகோர்ட்டில் தி.க. வழக்கு
சிதம்பரம் வெளிநாட்டுக்கு பறந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் சிபிஐ கோரிக்கையாக இருந்தது.
ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை கடந்த 2ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது நினைவிருக்கலாம்.