சிபிஐக்கு எதிரான வழக்கு.. ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் கோரிக்கை மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
Recommended Video
டெல்லி: சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்குள் சுவர் எகிறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். கடந்த வாரம் முழுக்க ப. சிதம்பரம் கைது இந்திய அரசியலையே உலுக்கிக் கொண்டு இருந்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார்.
காவலில் எடுத்தனர்
மேலும் ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட சிபிஐ மூலம் கஸ்டடி இன்றோடு முடிகிறது. இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்யும் முன்பே அவர் முன்ஜாமீன் தாக்கல் செய்து இருந்தார்.
கைது செய்தது
ஆனால் அவரின் முன்ஜாமீன் மனு விசாரிக்கப்படும் முன்பே அவரை சிபிஐ கைது செய்தது. அதோடு ப.சிதம்பரத்தின் கஸ்டடியை தற்போது நீட்டிக்கவும் சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது. இந்த ஐஎன்எக்ஸ் வழக்கில் இன்று இரண்டு விதமான மனுக்களை ப. சிதம்பர தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஒரு மனு அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கூடாது என்று ப.சிதம்பரம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும்.
என்ன முக்கியம்
அடுத்தபடியாக ப. சிதம்பரத்தின் முன் ஜாமீனை டெல்லி ஹைகோர்ட் நீக்கியதற்கு எதிரான வழக்குதான் முக்கியமான வழக்கு ஆகும். ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை டெல்லி ஹைகோர்ட் நீக்கியது தவறு, அதனால் அவரை கைது செய்ததும் தவறு என்று கூறி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டது.
யார் ஆஜர்
இதில் ப. சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜர் ஆனார்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.நீதிபதிகள் பானுமதி, ஏ எஸ் போபண்ணா அமர்வு விசாரணை செய்தது.
என்ன வாதம்
கபில் சிபல் தனது வாதத்தில், சிதம்பரத்தின் மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் முன்பே கைது செய்துவிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் முன் சிதம்பரத்தை கைது செய்தது தவறு. சிதம்பரத்திற்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
கைது தவறு
ஆனால் விசாரணைக்கு முன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின் கைது செய்வது நீதிக்கு எதிரானது. நீதிமன்றத்தை மீறி இந்த கைது நடந்துள்ளது: இந்த கைதே தவறானது,என்றார்
அபிஷேக் மனு வாதம்
அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில், முன் ஜாமீன் மனுவை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது எல்லோருக்கும் தெரியும். சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் கூறியது தெரியும். ஆனால் அனைத்தையும் மீறி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார், என்றார்
ஏற்கவில்லை
ஆனால் நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்கவில்லை. முன் ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதால் முன் ஜாமீன் வழக்கை விசாரிக்க முடியாது. கைதுக்கு பின் எப்படி முன் ஜாமீனை விசாரிக்க முடியும், என்று நீதிபதிகள் கூறினர்.
வழக்கு தள்ளுபடி
இதையடுத்து இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது சிபிஐ வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.