ஜெ. மரணம்.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் 4 வாரம் விசாரிக்க முடியாது.. உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை மேலும், 4 வாரத்துக்கு தொடருகிறது. வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு 4 வாரம் அவகாசம் கோரியதை ஏற்றது உச்சநீதிமன்றம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் மருத்துவ நிபுணர்கள் இன்றி இயங்குவதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவில் இருந்தால்தான், விசாரணை முறையாக இருக்கும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசிடம் விளக்கம் கேட்டும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதலாக நான்கு வாரம் அவகாசம் கேட்கப்பட்டது, இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதற்கு இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.