தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்?- உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை அளித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் திருத்தம்கொண்டு வர கோரி தமிழக அரசு சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அனைவரும் ஒரே நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கூடுதலாக அதிகாலை 4.30 முதல் 6.30 மணி வரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் அந்த நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபாவளி அன்று காலை ஒரு மணிநேரமும் , மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும் இந்த உத்தரவு தமிழகம், ஆந்திரம், புதுவை, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.