பசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே? சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: பசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே என்று சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதில் பல்வேறு நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்திருக்கிறது. குறிப்பாக.. பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது.
ஆனால், பேரியம் நைட்ரேட் மூலமே சங்கு சக்கரம், பென்சில், புஸ்வாணம் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பட்டாசுகளை தயாரிக்க முடியும். அதேநேரத்தில் பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை மத்திய அரசு இதுவரை எதையும் அடையாளம் காட்டவில்லை என்று பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்,900க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றார்.
அப்போது நீதிபதிகள், ஏற்கனவே நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல் படி பசுமை பட்டாசு தயாரிக்க ஆலைகள் ஒப்புதல் பெற்றுள்ளதா என்று வினவினர். தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு தொழில் நலிந்துள்ளது என்று கூறுவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.