சர்ச்சைகுரிய நிலப்பகுதி.... அயோத்தி வழக்கை நாளை முதல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை நாளை முதல் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.
கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது.
மேல் முறையீடு
அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியில் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள இடம் சன்னி வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என உத்தரவிட்டது. இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.
வழக்கு விசாரணை
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களும் கடந்த மாதம் 29ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்கள் புதியதாக அமைக்கப்பட இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.
புதிய அமர்வு
அதன்படி, கடந்த 4ம் தேதி அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு அயோத்தி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்றும் ஆனால் அதனை விசாரிக்கும் புதிய அமர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
நாளை முதல் விசாரணை
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திராசூட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை முதல் விசாரணை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.