ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை நவ.13 வரை அறிவிக்கக்கூடாது.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நவம்பர் 13ம் தேதி வரை தொடரும் என்றும் அதுவரை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2016ம் ஆண்டு நடந்த ராதாபுரம் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டார்கள்
இதில் இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். அதிமுகவேட்பாளர் இன்பதுரை, அப்பாவுவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திருச்சியிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள்.. ஊருக்கு செல்வோர் கவனத்துக்கு!
உயர்நீதிமன்றம்
இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில் சர்ச்சைக்குரிய தபால் வாக்குகள் மற்றும் கடைசி மூன்று சுற்று வாக்குகளை எண்ண வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடைசி மூன்று சுற்று
இதையடுத்து சென்னை நீதிபதியின் உத்தரவுப்படி ராதாபுரம் தொகுதியின் சர்ச்சைக்குரிய தபால் வாக்குகள் மற்றும் கடைசி மூன்று சுற்று வாக்குப் பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை மற்றும் திமுக வேட்பாளர் அப்பாத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
முடிவை வெளியிட தடை
இந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி இன்பதுரை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேநேரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட அக்டோபர் 23ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது.
உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை நவம்பர் 13ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராதாபுரம் தேர்தல் வழக்கு நவம்பர் 13ம் தேதியே விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.