இன்னும் 15 நாள் காத்திருக்கலாமே.. ஒமர் அப்துல்லா கைதுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை (1978ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்) 'பிஎஸ்ஏ' கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு, எதிராக ஹேபியஸ் கார்பஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஆட்கொணர்வு மனு என்பதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று விடுத்த, கோரிக்கையை ஏற்க மறுத்த அந்த அமர்வு 15 நாட்களுக்கு முன்பாக இதை விசாரிக்க முடியாது என கூறி, வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆட்கொணர்வு மனுவை, ஓமர் அப்துல்லா சகோதரி, சாரா பைலட் தாக்கல் செய்திருந்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய்பபட்ட பிறகு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்டடதாகவும், ஒமர் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ஆரம்பத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 107 ன் கீழ் இருந்ததாகவும் பிப்ரவரி 5ம் தேதி முதல்தான், பிஎஸ்ஏ சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டது என்றும் கபில் சிபல் வாதிட்டார்.
ஆனால், இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக, நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார். ஆனால், இது ஆட்கொணர்வு மனு. அவசர தேவையுள்ளதாலும், ஒருவரின் சுதந்திரம் தொடர்புள்ளது என்பாதலும், 3 வாரங்கள் வரை தள்ளி வைப்பது சரியல்ல என்று குறுக்கிட்டார்.
இதையடுத்து கால அவகாசத்தை குறைத்துக்கொண்ட நீதிபதி, மார்ச் 2ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
நீதிபதி மிஸ்ரா கூறுகையில், நீங்கள் வெகு காலமாக காத்திருந்தீர்கள், வழக்கு தொடர ஒரு வருடம் காத்திருந்தீர்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட கபில் சிபல், வழக்கு தொடர ஓராண்டு காத்திருக்கவில்லை, ஏனெனில், நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது, தடுப்பு காவல் பற்றி கிடையாது. பிஎஸ்ஏ சட்டத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராகத்தான் இப்போது வழக்கு தொடுத்துள்ளோம் என்றார்.
ஆனால், ஏற்கனவே நீண்ட காலம் ஓமர் அப்துல்லா சகோதரி காத்திருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்கள் காத்திருப்பது பெரிய வித்தியாசத்தை தராது என கூறிய நீதிபதி மார்ச் 2ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.