முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய ஆண்கள், தங்களது மனைவிகளை, மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதித்து மத்திய அரசு அண்மையில் சட்டம் கொண்டு வந்தது.இந்த சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மேலும் இரண்டு அமைப்புகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மூன்று மனுக்களும் முத்தலாக் தடை சட்ட மசோதா 2019 அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி தாக்கல் செய்ப்பட்டுள்ளன.
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.