பணத்தை விட பிரைவசி முக்கியம்.. உச்சநீதிமன்றம் அதிரடி.. பம்மிய வாட்ஸ் அப், பேஸ்புக்
டெல்லி: மக்களின் சுயவிவரங்களை, பிரைவசியைக் காப்பது எங்கள் கடமை. மக்கள் உங்கள் புதிய கொள்கை குறித்து அச்சமடைந்துள்ளனர் என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனது புதிய தனியுரிமைக் கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. பயனர்களின் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் உள்ளிட்ட சுயவிவரங்களை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன தளங்களில் பகிர ஒப்புதல் கேட்டு வலியுறுத்தியது.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த யூஸர்கள், வாட்ஸ் அப்-க்கு மாற்றாக இயங்கி வரும் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.
பேஸ்புக் நிறுவனத்துக்கு விற்பனை
இதன்மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், பெர்சனல் chat-களின் உள்ளடக்கம், Whatsapp Pay மூலம் வாங்கும் பொருட்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை, பயன்படுத்தும் சிம் கார்டு, செல்போன் மாடல், பேட்டரியின் அளவு, சிக்னலின் தரம், பயன்படுத்தும் ஓ.எஸ். மற்றும் பிரவுசர், ஐபி முகவரி உள்ளிட்ட பல விவரங்களை தனது சர்வரில் வாட்ஸ் அப் நிறுவனம் சேகரித்து கொள்ளும். அதை பின் பேஸ்புக் நிறுவனம் மற்றும் அதனுடன் ஒப்பந்தம் வைத்துள்ள பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து கொள்ளும்.
தடை கோரி
எனினும், கடும் எதிர்ப்பு எழுந்ததால் தனியுரிமை கொள்கை மாறுபாட்டை தற்காலிகமாக வாட்ஸ் அப் நிறுத்தி வைத்தது. இதற்கிடையே, வாட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தனிப்பட்ட விஷயம்
இந்த மனு இன்று (பிப்.15) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் நிறுவனம் ட்ரில்லியன் டாலர்கள் ஒர்த் உள்ள நிறுவனங்களாக இருக்கலாம். எனினும், மக்களுக்கு அவர்களின் தனிப்பட்ட விஷயம் அதை விடவும் முக்கியம்.
மக்கள் அச்சம்
மக்களின் சுயவிவரங்களை, பிரைவசியைக் காப்பது எங்கள் கடமை. அதோடு மக்கள் உங்கள் புதிய கொள்கை குறித்து அச்சமடைந்துள்ளனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமை அமர்வு கண்டித்துள்ளது.
பயம் தேவையற்றது
இதற்கு வாட்ஸ் அப் தரப்பில், 'ஐரோப்பாவில் பிரைவசிக்கே தனிச் சட்டம் உள்ளது. இந்தியாவிலும் அதே போன்று சட்டம் இருந்தால் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். பிரைவசி குறித்த பயம் தேவையற்றது, அடிப்படையற்றது, என்று தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.