செக்! இனி இலவசங்களை அள்ளி வீச முடியாது? கட்சிகளுக்கு வரும் கடிவாளம்- சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
டெல்லி: தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து அறிவிக்கத் தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வரும் பிப். 10ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 10இல் அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
5 மாநில தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இலவசங்கள் குறித்துத் தேர்தல் கட்சிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகள் குறித்துப் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள்.. தடுப்பது எப்படி? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பஞ்சாப்
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதால் அனைத்து கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. பஞ்சாபில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்திருந்தார்,
இலவசங்கள்
தேர்தலில் வெற்றி பெற்றால் இதைத் தருவோம், அதைத் தருவோம் என இலவசங்கள் குறித்து அரசியல் கட்சிகள் அள்ளி வீசும் அறிவிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படி இலவசங்களை அள்ளிவிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னத்தை முடக்கத் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்
தேர்தல் காலங்களில் மக்களைக் குழப்பும் வகையிலும் அரசியல் சாசனத்தை மீறும் வகையிலும் உள்ளதால் இதுபோன்ற நடவடிக்கைகளை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்றும் இது குறித்துத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தேர்தலைக் கருத்தில் கொண்டு வெளியிடப்படும் இந்த அறிவிப்புகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசியலமைப்பின் உணர்வையும் காயப்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுப்பது போலத் தான்
இதுவும் ஆட்சியில் தொடர வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போலத் தான் என்றும் ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாக்க இது போன்ற நடைமுறைகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகளில் இதுபோன்ற இலவசங்கள் குறித்த அறிவிப்பை அறிவிக்கக் கூடாது என்பதையும் ஒரு நிபந்தனையாகச் சேர்க்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
முக்கிய உத்தரவு
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரமணா, "இது ஒரு தீவிரமான பிரச்சினை. இது தேர்தல் செலவுகளுக்கு அப்பாற்பட்டது. இதை நம்மால் ஊழல் என்று குறிப்பிட முடியாது என்றாலும் கூட தேர்தல் களத்தில் இது ஒருதலைபட்சமான ஒரு அணுகுமுறையை உருவாக்குகிறது" என்றார். மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியும் அவர் உத்தரவிட்டார்.