யானைகள் வழித்தடம் இல்லாத கட்டிடங்களுக்கும் சீல் ஏன்.. ஊட்டி கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: யானை வழித்தடத்தில் இல்லாத கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை உள்ளிட்ட சீகூர், சிங்காரா போன்ற வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.
மசினகுடி, மாயார், மாவல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகள் யானைகள் வழித்தடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்த பகுதிகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், காட்டேஜ்கள், வீடுகளை கட்டி வைத்துள்ளனர்.
யானை ராஜேந்திரன்
இது யானைகளின் இனப்பெருக்கத்திற்கு தடையாக இருப்பதாக கூறி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில், ஹைகோர்ட்டும், யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமிக்க தடை விதித்தது.
காலி செய்ய உத்தரவு
அத்துடன், யானைகளின் வழித்தடம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், காட்டேஜ்களை அதன் உரிமையாளர்கள் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எல்லா காட்டேஜ் உரிமையாளர்கள், விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வருடம் மேல்முறையீடு செய்தனர்.
மாவட்ட கலெக்டர்
இந்த வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட், யானை வழிதடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, இதுவரை யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
கட்டிடங்களுக்கு சீல்
ஆனால், யானை வழிதடத்தில் இல்லாத கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக மீண்டும் காட்டேஜ் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதனால் உரிய அனுமதியுடன் இருக்கும் காட்டேஜ்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
கலெக்டருக்கு நோட்டீஸ்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "யானை வழித்தடத்தில் இல்லாத கட்டிடங்களுக்கும் ஏன் சீல் வைக்கப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் உண்மை நிலை என்ன, என்பது குறித்தெல்லாம் 4 வாரங்களில் பதிலளிக்கவும் மாவட்ட கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.